சோளிங்கர், செப். 11: சோளிங்கர் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 1 வயது குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கடித்து வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபரை, போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், சோளிங்கர் ரயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் நிரப்பும் பணியில், தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அனைவரும் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் தூங்கினர். இதில் துர்காபிரசாத்(22), அவரது மனைவி பார்வதி ஆகியோர் தங்களது 1 வயது குழந்தையுடன் தூங்கினர்.பின்னர், நேற்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை திடீரென அழுதுள்ளது. இதனால் துர்காபிரசாத், பார்வதி ஆகியோர் கண்விழித்து பார்த்தபோது, 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.