×

பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்மஅடி சோளிங்கரில் பரபரப்பு

சோளிங்கர், செப். 11: சோளிங்கர் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 1 வயது குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கடித்து வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபரை, போலீசில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், சோளிங்கர் ரயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் நிரப்பும் பணியில், தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பிறகு தொழிலாளர்கள் அனைவரும் ரயில்நிலைய பிளாட்பாரத்தில் தூங்கினர். இதில் துர்காபிரசாத்(22), அவரது மனைவி பார்வதி ஆகியோர் தங்களது 1 வயது குழந்தையுடன் தூங்கினர்.பின்னர், நேற்று அதிகாலை 4 மணியளவில் குழந்தை திடீரென அழுதுள்ளது. இதனால் துர்காபிரசாத், பார்வதி ஆகியோர் கண்விழித்து பார்த்தபோது, 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்ல முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

இதனால், அந்த வாலிபர், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார். சத்தம் கேட்ட சக தொழிலாளர்கள், அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் பிளாட்பாரத்தில் இருந்த கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து, காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அவர் வாலாஜா அருகே அணைக்கட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தினேஷ்(30) என்பதும், அவர் குடிபோதையில் குழந்தையை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிந்து தினேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : railway station ,
× RELATED தஞ்சாவூர் ரயில் நிலையத்தில்...