விருதுநகர், செப். 10: விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் உள்ள தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா ஆக.31ம் தேதி பங்குத்தந்தை பெனடிக்ட் பர்னபாஸ், துணை பங்குத்தந்தை செபஸ்தியான் இஞ்ஞாசி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினசரி திருப்பலி, மறையுரை நடைபெற்றது. 9ம் நாளான நேற்று முன்தினம் மாலை விருதுநகர் மறைவட்ட அதிபர் பெனடிக்ட் அம்புரோஸ் தலைமையில், தேர்ப்பவனி நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கபட்ட தேரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருஉருவம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது, பொதுமக்களும், கிறிஸ்தவர்களும் மரியே வாழ்க கோஷமிட்டு பாடல்களை பாடி பிரர்த்தனை செய்தனர். இதில்ஆர்.ஆர்.நகர், கன்னிசேரிபுதூர், கல்போது, முதலிப்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, ஓ.கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், நிறைவாழ்வு நகர், பாண்டியன்நகர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை தலைமையில் இறைமக்கள் செய்திருந்தனர்.