விருதுநகர், செப். 10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மதுரை சட்டவிழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தலைமையில் ஓய்வு பெற்ற ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிராம ஊராட்சிகளில் பணியாற்றி 2017 அக்.1ம் தேதிக்கு பின்,ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம், ரூ.50 ஆயிரம் பணிக்கொடை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் 2017க்கு பின் ஓய்வு பெற்ற எந்த ஒரு துப்புரவு பணியாளருக்கும் இதுவரை ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை ஓய்வு பெற்ற 18 தொழிலாளர்கள் மனு அளித்தும் ஊராட்சிகளில் நிதியில்லை என வழங்க மறுத்து வருகின்றனர். பஞ்சாயத்துகளில் நிதியில்லை என்றால் ஊராட்சி பொதுநிதியில், மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து ஓய்வூதியம், பணிக் கொடை வழஙக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி மனு:
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி வாலிபர் முத்துமணிகண்டன் (21) வேலை கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘சாத்தூர் அருகே உள்ள புல்வாய்பட்டியில் வசிக்கிறேன். தந்தை முருகேந்திரன், தாய் முருகஜோதி இருவரும் கூலி வேலை செய்து தம்பியை படிக்க வைக்க சிரமப்படுகின்றனர். பிளஸ் 2 முடித்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் தொடர்ந்து படிக்க வசதியில்லை. தற்போது குடும்பச் சூழல் கருதி மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் எனக்கு வேலை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.