திருவெறும்பூர், செப்.10: துவாக்குடி அரசு போக்குவரத்துகழக பணிமனை முன் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கண்டன வாயிற்கூட்டம் நடத்தினர். அப்போது 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டுமென வலியுறுத்தினர். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் அரசு போக்குவரத்து கழக பணினை உள்ளது. இப்பணிமனையில் ஆளும் கட்சியை சேர்ந்த தொழிற்சங்கத்தினரின் தலையீடு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து நிர்வாகம் செய்வது கிளைமேலாளரா, ஆளும் சங்கத்தினரா என்ற கேள்வியுடன் பணிமனை முன் கண்டன வாயிற்கூட்டம் நடத்தினர். வாயிற்கூட்டத்திற்கு கிளை தலைவர் சுந்தரவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துச்செல்வன், பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் மணி, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் காத்திகேயன், மத்திய சங்க துணைத்தலைவர் சுவாமிநாதன், மத்திய சங்க நிர்வாககுழு உறுப்பினர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.