திருச்சி, செப்.10: திருச்சியில் நடந்து சென்ற பெண்ணை படம் பிடித்த மனநலம் பாதித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்சி தில்லைநகரில் நடந்து சென்ற ஒரு பெண்ணை, அப்பகுதியில் நின்றிருந்த ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் படம் பிடித்தார். அப்பெண்ணை பல்வேறு கோணங்களில் படம் எடுப்பதுபோல தனது செல்போனை கொண்டு பாவனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பெண் அதிர்ச்சியடைந்து சத்தம்போட்டார். அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து தில்லைநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்ததில், கீரனூரை சேர்ந்த ராஜேஸ் என்பது தெரியவந்தது. ஆனால் தொடர்ந்து அவரது செயல்கள் ஒரு மனநோயாளி போல் இருந்தது. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.