முசிறி, செப்.10: முசிறி தாலுகா பேரூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரசு அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பேரூர் கிராமத்தில் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பாக 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில்லை. கிராமத்தில் சாலை, சாக்கடை வசதி, தெருவிளக்குகள் ஆகியவற்றை முறையாக பராமரிப்பதில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பேரூர், ஜெம்புநாதபுரம், முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். அதன்படி நேற்று சாலை மறியல் செய்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேரூர் கிராமத்தில் திரண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜான்கென்னடி, முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் வருவாய்துறை முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.