நாகர்கோவில், செப்.10: குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு அச்சக நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது.குமரி மாவட்டம் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாவட்ட கூட்டுறவு அச்சகம் ஆகியவற்றுக்கு வருகிற 16ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் இரு பிரிவுகளிலும் தலா 21 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும். இவர்களில் 11 பேர் பொது, 4 பேர் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், 6 பேர் பெண்கள் ஆவர். இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை ெதாடங்கியது. கூட்டுறவு ஒன்றியத்துக்கு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் அதிமுக அணி சார்பில், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போல் திமுக அணியினர் நேற்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் முன்னாள் அரசு வழக்கறிஞர் சிங்கராயன், பள்ளவிளை ராஜேஷ், செல்வக்குமார் உள்பட 19 பேர் போட்டியிடுகிறார்கள். ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பூதலிங்கம் உள்ளிட்டோர் மனு தாக்கல் நிகழ்ச்சியின் போது உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் நடைபெற்றதையொட்டி, பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.