மார்த்தாண்டம், செப். 10: நாகர்கோவிலை அடுத்த எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ராகவன் (49). இவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி மினிலாரியை ஓட்டிச்சென்றார். மார்த்தாண்டம் சந்திப்பை தாண்டி மேம்பாலம் வழியாக சென்ற போது திடீரென மினிலாரியின் ஜாயின்ட் ராடு உடைந்தது. அப்போது நிலை தடுமாறி எதிரே களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் நோக்கி, புத்தளத்தை சேர்ந்த வெற்றிவேல் முருகன்(46) என்பவர் ஓட்டி வந்த லாரி மீது மோதியது.அதே வேகத்தில் மினி லாரி கவிழ்ந்தது. ராகவன் மினிலாரிக்கு இடையில் சிக்கிக்கொண்டார். கவிழ்ந்த மினிலாரியில் இருந்த கயிறு மற்றும் கேரியர் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தின் கீழே போய் விழுந்தது. அதில் கயிறு, அருமனை மாலைக்கோடு பகுதியைச் சேர்ந்த மேரி(53) என்பவர் மீது விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். மேலும் வெற்றிவேல் முருகன் ஓட்டி வந்த லாரியின் பின்புறம் வந்த கார் லாரி மீது மோதி சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.