உத்திரமேரூர், மதுராந்தகம் பகுதிகளில் பஸ்கள் கவிழ்ந்து 65 பேர் காயம்

சென்னை: உத்திரமேரூர் மற்றும் மதுராந்கதம் அருகே அரசு மற்றும் தனியார் பஸ்கள் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 இடங்களிலும் 65 பேர் காயமடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து நேற்று  மதியம் அரசு பஸ் (தஎண் 148) சென்னை கோயம்பேடு நோக்கி புறப்பட்டது. டிரைவர் வேளியப்பன், கண்டக்டராக  பஞ்சாட்சரம் இருந்தனர். சேத்துப்பட்டு, வந்தவாசி, மானாம்பதி,  உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் பயணிகளை ஏற்றி கொண்டு  கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. உத்திரமேரூர் - செங்கல்பட்டு ரோட்டில் நடராஜாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார், அரசு பஸ்சை முந்தி  செல்ல  முயன்றது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த டிரைவர், கண்டக்டர் உட்பட  40க்கும் மேற்பட்டோர் காயமந்தனர். பஸ் சேதமடைந்தது. தகவலறிந்து, சாலவாக்கம் போலீசார்  சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணிநேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய காரை, சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிவிட்டார். அந்த காரை, போலீசார் பறிமுதல் செய்து, தப்பிேயாடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.மதுராந்தகம் : மதுராந்தகத்தில் இருந்து ஒரு தனியார் பயணிகள் பஸ் நேற்று மாலை தண்டலம், எல் எண்டத்தூர், உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டது.  ஒரத்தூர் அருகே அம்மனூரை சேர்ந்த டிரைவர் மணி (25) என்பவர்  பஸ்சை ஓட்டினார். இதில், 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ் தண்டலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில்    தலைகுப்புற கவிழ்ந்தது.  இதில் பஸ்சில்  பயணம் செய்தவர்கள், அலறி கூச்சலிட்டனர். இதை கண்டதும், அப்பகுதி மக்கள், ஓடிவந்து பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 25 பேரை மீட்டு 20 பேரை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கும், கவலைக்கிடமாக இருந்த 5 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: