சோளிங்கர், செப்.5: சோளிங்கரில் அடகு வைத்த நகைகள் ₹4 கோடி மோசடி சம்பவத்தில், நகைகளை திருப்பிக்கேட்டு வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் மையப்பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பலர் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றனர். இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நகைகளை மீட்க வந்தபோது, பலரது நகைகள் போலியாக இருந்ததும், சிலரது நகைகள் மாயமாகியிருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்திடம் கேட்டனர். இதையடுத்து, வங்கி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டது. இதில் நகை மதிப்பீட்டாளர் பாபு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி நிர்வாகம் சார்பில் பாபு மீது கடந்த 2017ம் ஆண்டு சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வங்கியில் 150க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான ₹4 கோடி மதிப்புள்ள அடமான நகைகள் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து பாபுவை கைது செய்து சோளிங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, பாபு சிறைக்கு சென்ற சில மாதங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு சோளிங்கர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.