வாணியம்பாடி, செப்.5: வாணியம்பாடியில் வீட்டின் பூட்டு உடைத்து 50 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் கவுசிக்(40), தனியார் தோல் தொழிற்சாலை மேலாளர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை சென்றிருந்தார். நேற்று காலை சென்னையில் இருந்து திரும்பிய அவர், நேராக தொழிற்சாலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இவரது வீட்டு வேலைக்காரப்பெண் கவுசிக் வேலைக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைத்து திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, யாரும் இல்லாத நிலையில், பொருட்கள் சிதறிக்கிடந்ததை பார்த்தார். உடனடியாக அங்குள்ள கவுசிக்கின் உறவினர்கள் வீட்டுக்கு சென்று தெரிவித்தார்.இதுகுறித்து தகவலறிந்த கவுசிக் உடனடியாக வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, வீட்டில் இருந்த 5 பீரோக்களின் பூட்டு உடைத்து அவற்றில் இருந்த மொத்தம் 50 சவரன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை திருடி சென்றிருந்தது தெரிந்தது.