திருவில்லிபுத்தூர், ஆக.22: திருவில்லிபுத்தூர் அருகே, கங்காகுளத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலைவிழா நடைபெற்றது. வள்ளிநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சண்முகம், ராஜபாளையம் கிளைத்தலைவர் விஜயராணி, பகிர்வு அறக்கட்டளை சரவணன் வாழ்த்தினர். ‘தேசிய கல்விக் கொள்கை 2019ல் பொதிந்திருக்கும் சூழ்ச்சி’ என்ற தலைப்பில் எழுத்தாளர் கிருஷ்ணசாமியும், ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’, என்ற தலைப்பில் தேனி மாவட்ட செயலாளர் தமிழ்மணியும், ‘நீங்கள் யார் பக்கம்’ என்ற தலைப்பில் மாநில துணை பொதுச்செயலாளர் லட்சுமிகாந்தன் பேசினர். நிகழ்ச்சியில் ஓவியர் கலைச்சொல்வன், சமூக ஆர்வலர் துரைராஜ் ஆகியோரை பாராட்டினர். வைமா திருப்பதி செல்வன் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். கிளைச் செயலாளர் நித்தியானந்தம் நன்றி கூறினார்.