×

மாவட்டம் மூணாறில் பெரியவாரை தற்காலிக பாலம் அருகே மீண்டும் மண்சரிவு

மூணாறு, ஆக. 22: மூணாறு-உடுமலை செல்லும் சாலையில் பெரியவாரை தற்காலிக பாலத்தின் அருகில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மூணாறில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை மூணாறு-உடுமலை சாலையில் பெரியவாரை தற்காலிக பாலத்தின் அருகில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு வாகனங்கள் செல்லும் சாலையில் ஒரு வாகன மட்டுமே சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பெரியவாரை பாலத்தில் சிறுரக வாகனங்கள் மட்டும் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஆற்றில் ஒழுகும் வெள்ளத்தை துணை ஆட்சியர் உத்தரவின்பேரில் வேறு வழியாக ஆற்றில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் சாலையில் மண்சரிவு ஏற்படும் பட்சத்தில் தேசிய பாதை முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தேவிகுளம் துணை ஆட்சியர் ரேணுராஜ் அறிவித்துள்ளார்.


Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு