மாவட்டம் நெடுஞ்சாலைத்துறையின் அணுகுமுறையால் பளிச்’ சாலை ஒருபுறம் பல்லிளிக்கும் சாலை மறுபுறம்

திருமங்கலம், ஆக.22: திருமங்கலம் அருகே எல்லை பிரச்னையை காட்டி 200 மீட்டர் தூரத்திற்கு மட்டும் சாலை போடாமல் குண்டும், குழியுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்திலிருந்து சோழவந்தான் செல்லும் மெயின் ரோட்டில் மொட்டமலை பகுதியிலிருந்து அனுப்பப்பட்டி வழியாக சொரிக்காம்பட்டி கிராமத்திற்கு சாலை செல்கிறது. மொட்டமலையிலிருந்து சொரிக்காம்பட்டி 5 கி.மீ தூரத்தில் உள்ளது. இதில் சொரிக்காம்பட்டிக்கு செல்லும் சாலையில் திருமங்கலம் - சோழவந்தான் மெயின் ரோட்டிலிருந்து 200 மீட்டர் தாண்டி தற்போது புதிய தார்ச்சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர். மொட்டப்பாறை விலக்கிலிருந்து சுமார் 200 மீட்டர் சாலையை யூனியன் சாலை என விட்டு, விட்டு எல்லை பிரச்னையை காரணம் காட்டி மற்ற பகுதியில் சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர். 5 கி.மீ தூரமுள்ள சாலையில் 200 மீட்டர் துாரத்தினை மட்டும் எல்லையைக் காட்டிவிட்டு அதிகாரிகள் சாலை அமைத்துள்ளது கிராம பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 200 மீட்டர் சாலை மட்டும் குண்டும், குழியுமாக காட்சி தருகிறது.

இதுகுறித்து திருமங்கலம் யூனியன் அதிகாரிகளிடம் கேட்ட போது, `` எல்லை பிரச்னையை காரணம் காட்டி 200 மீட்டரை நெடுஞ்சாலைத்துறையினர் விட்டு விட்டனர்’’ என்று பதிலளித்தனர். நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டதற்கு, அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த 200 மீட்டரை தாண்டி திருமங்கலம் நெடுஞ்சாலை உட்கோட்டம் ஆரம்பிக்கிறது என நெடுஞ்சாலைதுறையினர் போர்டு வைத்து பொதுமக்களை விரக்தியடையச் செய்துள்ளனர். ``யூனியன் ரோடாக இருந்தாலும் 200 மீட்டரையும் சேர்த்து ரோடு போட்டு பணிகளை முடித்திருந்தால் நன்றாக இருக்கும்’’ என்று கரடிக்கல், அனுப்பப்பட்டி, மொட்டபாறை பகுதியை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட கலெக்டர் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: