சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற போலீஸ் பாதுகாப்பு

மதுரை, ஆக. 22: சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த வரதராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து உரிய அனுமதியின்றி பலர் கடைகள் அமைத்துள்ளனர். குறிப்பாக, ஒத்தக்கடை முதல் கே.கே.நகர் வரையிலான ரோட்டில் பல ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இவற்றை அகற்றவும், இப்பகுதியில் யாருக்கும் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில்,  உரிமம் பெற்றவர்கள் இல்லாமல் வேறு நபர்களால் நடத்தப்படும் 92 கடைகள் உள்ளன. 72 பேர் உரிய அனுமதியின்றி கடைகள் வைத்துள்ளனர். ஆக்கிரமிப்புகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்கிறது’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும்போது தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை ஆக.29க்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: