பழநி அருகே பல்கலை அளவிலான கபடி போட்டி

பழநி, ஆக. 22: பழநி அருகே நடந்த பல்கலைக்கழக அளவிலான கபடி போட்டியில் ஏராளமான கல்லூரி அணிகள் பங்கேற்றன. பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் உள்ள பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில்  அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி நேற்று துவங்கியது. போட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக அணி, பழநியாண்டவர் மகளிர் கல்லூரி அணி, பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கலைக்கல்லூரி, கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி அணி, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி அணி, செயின்ட் ஆண்டனி கல்லூரி அணி, ஒட்டன்சத்திரம் சக்தி கல்லூரி அணி, நிலக்கோட்டை அரசுக் கல்லூரி அணி  பங்கேற்றன.

போட்டியை கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி துவக்கி வைத்தார். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர் ராஜம் முன்னிலை வகித்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை பழநியாண்டவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கலையரசி, தமிழ்த்துறை பேராசிரியர் குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விளையாட்டின்போது காயமடையும் மாணவிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதலுதவி சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இன்று (வியாழன்) நடைபெறும் இறுதிபோட்டியில் வெற்றி பெறும் அணி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்பர்.

Related Stories: