×

விபத்துகளில் 4 பேர் பலி

கோவை, ஆக.22:  கோவை சரவணம்பட்டி என்.எஸ்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரங்கராசு(58). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கோவை-சத்தி ரோட்டில் குரும்பபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் அவர் பலியானார். விபத்து தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். கோவை மதுக்கரை அடுத்த திருமலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபிகண்ணன்(56). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் கோவை-பாலக்காடு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை தெற்கு உக்கடம் சிஎம்சி காலனியை சேர்ந்தவர் மாரியம்மாள்(35). இவர் உக்கடம்-பேரூர் பைபாசில் சாவித்திரி நகர் அருகே நேற்று முன் தினம் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது இதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது தொடர்பாக மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(45). தொழிலாளி. இவர் நேற்று மொபட்டில் எம்டிபி சாலையில் உள்ள தெப்பகுளம் தெரு ஜங்சனில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் பஸ்சின் டயர் ஏறி இறங்கியதில் சொக்கலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி