×

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

கோவை, ஆக.22: கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் ராஜாராம்(39). இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். சிறிது காலத்துக்குப் பின்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து 2வதாக மீண்டும் ஒரு பெண்ணை ராஜாராம் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது மனைவி பொள்ளாச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற போது அங்கு முதல் கணவரை சந்தித்தார். இதில் மனம் மாறி இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவெடுத்தனர்.

பொள்ளாச்சியில் இருந்து வீடு திரும்பாதது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டபோது அவர் தன்னுடைய முதல் கணவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்ததை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாராம் இது குறித்து மகளிர் போலீசில் புகார் செய்தார். விவாகரத்து பெறாததால் முதல் கணவருடன் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதால் ராஜாராம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜாராம் இறந்தார். இதுகுறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி