3 ஆண்டுகளில் 255 நூற்பாலைகள் மூடல் 1.20 லட்சம் பேர் வேலையிழப்பு

கோவை, ஆக.22:சீனா நூல் இறக்குமதியை குறைத்துள்ளதால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 255 நூற்பாலை மூடப்பட்டுள்ளன. இதனால் 1.20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் 600க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. இதனால், 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இருந்து சீனா நூல்களை இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்துக்கொண்டது. இதற்கு பதிலாக பாகிஸ்தான், வியட்நாம் பங்களாதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

இதனால் நூற்பாலைகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதனால், நூற்பாலைகளை நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் உள்ளனர்.கடந்த 2017-19 ஆண்டுகளில் தமிழகத்தில் 225 மில்கள் மூடப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூரில் 35க்கு மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கோவை, திருப்பூரில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.

இதுகுறித்து தொழில்துறையினர் கூறுகையில், ‘‘நூல் ஏற்றுமதிக்கு சீனாவை நம்பியிருந்த நிலையில், இறக்குமதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பருத்தி விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்த நெருக்கடி நிலையை போக்க மத்திய அரசு பூஜ்ஜிய சதவீத இறக்குமதியை கொண்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். நூற்பாலைகளுக்கான மூலப்பொருட்களை பூஜ்ஜிய சதவீத அடிப்படையில் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.’’ என்றனர்.

Related Stories: