ஈரோடு, ஆக. 22: ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 4,617 பேர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2019ம்ஆண்டிற்காக காவல், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 25ம் தேதி நடக்கிறது. ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் ஆண்கள் 1,920 பேரும், பெருந்துறை வாய்க்கால்மேடு நந்தா கல்வி நிறுவனங்களில் ஆண்கள் 2,134 பேரும், பெண்கள் 563 பேரும் என 2 மையங்களில் 4,617 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் கொண்டு வரும் நுழைவுசீட்டில் புகைப்படம் இல்லை என்றால் புகைப்படம் ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடம் சான்றொப்பம் மற்றும் முத்திரை பெற்றிருக்க வேண்டும்.