ஓசூர், ஆக.22: கர்நாடகாவில் தென்பெண்ணையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 41.82 அடிக்கு நீர் உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 568 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை, விநாடிக்கு 762 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, 640 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தென்பெண்ணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.