குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரச்சான்று பெற ரூ.1 லட்சம் மானியம்

நெல்லை, ஆக. 22:  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரச்சான்று பெற ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியிருப்பதாவது:தமிழக அரசின்  ‘க்யூ-சர்டிபிகேட்” என்ற புதிய திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ‘ISO 9000, ISO 14001, ISO 22000 HACCP,  GMP,  GHP, ZED’ தரச் சான்றிதழ்கள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற சர்வதேச தரச் சான்றிதழ்கள் பெற்ற தேதியில் இருந்து ஒரு ஆண்டிற்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடைய தொழில் நிறுவனங்கள், ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். நெல்லை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த தரச் சான்றிதழ்கள் பெற செலவழித்த கட்டணத் தொகையில் (பயணச் செலவு, தங்குமிடம், உணவு  மற்றும் கண்காணிப்புச் செலவு தவிர்த்து) 100 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை) தமிழக அரசால் மானியமாக வழங்கப்படும்.

இந்த தரச்சான்றிதழ்கள் பெறுவதால் நெல்லை மாவட்டத்தில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரம் மேம்படுத்தப்படும். தரமான பொருட்களின் தேவை அதிகரிப்பதால் உற்பத்தி அதிகரிக்கும். வளம் பெருகி தொழில் விரிவாக்கம் ஏற்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். எனவே, தமிழக அரசின் ‘க்யூ  -  சர்டிபிகேட்” என்ற புதிய திட்டத்தை பயன்படுத்தி நெல்லை மாவட்டத்தின் தொழில் தரத்தை பெருகச் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு பாளையங்ேகாட்டை புனித தாமஸ் சாலையில் உள்ள நெல்லை மாவட்ட தொழில் மையத்தை நேரில் அணுகலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: