×

ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டியில் குடிநீரில் புழுக்கள், இறைச்சி கழிவுகள்

ஓட்டப்பிடாரம், ஆக.22: ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டியில் மேல்நிலை தொட்டியிலிருந்து வழங்கப்பட்ட குடிநீரில் புழுக்களும், இறைச்சி கழிவுகளும் கிடந்ததால் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து முப்புலிவெட்டி கிராமத்திற்கு அங்குள்ள குளத்துப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைகிணறு மூலமாக கிராமத்தில் உள்ள 2 மேல்நிலை தொட்டிக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. அதிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் தெருக்கள் வாரியாக பிரிக்கப்பட்டு காலை மாலையில் இரு தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு மேல்நிலை தொட்டிகளிலும் மூடிகள் சேதமடைந்ததால் திறந்து கிடக்கிறது. இதனால் அதன்மீது அமரும் காக்கைகள் உள்ளிட்ட பறவைகள் எங்கிருந்தோ எடுத்து வந்த இறைச்சிக் கழிவுகளையும் அங்கிருந்து உண்பதால் அவற்றில் சிதறும் சில கழிவுகளும் எச்சங்களும் தொட்டியினுள் எளிதாக விழும் வாய்ப்புகள் உள்ளன.மேலும் முப்புலிவெட்டி கிராமத்துக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் சீராக கிடைக்காததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சீவலப்பேரி குடிநீர் சீராக கிடைக்க, தனி பைப்லைன் அமைக்க வேண்டியும், இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் மூடிகள் அமைத்து, முறையாக பராமரித்து சுத்தப்படுத்தவும் வலியுறுத்தி மார்க்சிஸ்டு சார்பில் ஆக.8ம் தேதி ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தெரிவித்தப்படி சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேல்நிலை தொட்டிக்கான மூடிகளும் பொருத்தப்படவில்லை. இந்நிலையில் நேற்று மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டது. அதில் புழுக்களும் இறைச்சிக் கழிவுகளும் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜ், கலெக்டர் சந்தீப்நந்தூரி, கோவில்பட்டி ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

அதில் முப்பிலிவெட்டி கிராமத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீர் அசுத்தமாகவும் புழுக்களும் இறைச்சி கழிவுகளும் கலந்து வருவதாகவும், நீர்த்தேக்க தொட்டி சுத்தப்படுத்தி, மூடிகள் அமைத்து தருவதாகவும், சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் தடையின்றி கிடைக்கநடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்திருந்தனர். அதை இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. எங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிடில் ஊர் மக்களைத்திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்