உடன்குடி அருகே பரபரப்பு நகைபறிக்க வந்த கொள்ளையர்களை மட்டையால் விரட்டியடித்த பெண்

உடன்குடி, ஆக.22: தூத்துக்குடி மாவட்டம், ெமஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி மெயின்ரோட்டை  சேர்ந்தவர் கணேசன்(50) மீன் வியாபாரி. இவரது மனைவி பொன்செல்வி (45). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள். இதில் மகன்கள் இருவரும் பெங்களூர் மற்றும் சென்னையில் வேலைபார்த்து வருகின்றனர். மகள் படித்து விட்டு வீட்டில் உள்ளார்.பொன்செல்வி கடந்த 19ம் தேதி அதிகாலை எழுந்து வீட்டின் முற்றத்தை பெருக்கி கொண்டிருந்தார். அப்போது ஹெல்மட் அணிந்த இருவர் சற்று ஒதுக்குப்புறமாக பைக்கை நிறுத்தி விட்டு பொன்செல்வியிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகையை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட பொன்செல்வி வீட்டின் முற்றத்தில் கிடந்த பனை மட்டையை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்ட முயன்றார். ஆனால், கொள்ளையர்கள் திடீரென அரிவாளால் பொன்செல்வியை நோக்கி வந்தனர். இருப்பினும் அவர் துணிச்சலுடன் மட்டையால் கொள்ளையர்களை துரத்தினார். இதையடுத்து கொள்ளையர்கள் அரிவாளை சுழற்றிக்கொண்டு பின்னோக்கி நகர்ந்து ஓட்டம் பிடித்தனர்.

போலீசாரை வெட்ட முயன்ற கொள்ளையர்கள்கொள்ளையர்களுடன் பொன்செல்வி போராடிக்கொண்டிருந்த வேளையில் சடையநேரி கால்வாய் தடுப்பு அணைக்கட்டுக்கு இரவு ரோந்து சென்ற மெஞ்ஞானபுரம் போலீசார் 2 பேர் பைக்கில் அந்த வழியாக வந்தனர். பொன்செல்வி கொள்ைளயர்களுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து அவர்கள் பைக்கை நிறுத்தி விட்டு அங்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் கொள்ளையர்கள் அவர்களை வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட போலீசார், பொன்செல்வி வீசி எறிந்த பனைமட்டையை எடுத்துக்கொண்டு அவர்களை பிடிக்க விரட்டினர். ஆனால் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி...எங்களை பிடிக்க நினைத்தால் வெட்டி விடுவோம் என்று மிரட்டினர். ஆனால் போலீசார் துணிச்சலுடன் அவர்களை நெருங்கினர். இதையடுத்து கொள்ளையர்கள் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது பனை மட்டையால் தடுத்து போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அதன்பிறகு கொள்ளையர்கள் பைக்கில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

 சினிமா போன்ற நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பொன்செல்வியின் துணிச்சலை அப்பகுதி மக்கள் பாராட்டினர். உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: