திருவெண்ணெய்நல்லூர், ஆக. 22: திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 490 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விழுப்புரம் தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பெண் சாராய வியாபாரி குமாரி வீட்டில் 16 கேன்களில் 490 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சாராய வியாபாரி குமாரி கடந்த சில தினங்களுக்கு முன் மலட்டாறு பகுதியில் சாராயம், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.