கள்ளக்குறிச்சி, ஆக. 22: கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கார்த்திக், மாவட்ட குழு அஞ்சலை, சின்னப்பொண்ணு, சுதா, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களை சீனியாரிட்டி அடிப்படையில் பரிசீலித்து உடனடியாக குறைகளை போக்க வேண்டும். கிராமங்களில் 100 நாள் வேலை மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணிநேர பணிக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். மாதந்திர உதவித்தொகையை மாதம் ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனத்திற்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் ஆறுமுகம், சாந்தி உள்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், மாற்றுத்திறனாளிகள் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்று காத்திருந்தனர். இதையடுத்து சார் ஆட்சியர் காந்த் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவதாக சார் ஆட்சியர் உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.