புதுச்சேரி, ஆக. 22: பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரியில் சபாநாயகர் ேதர்தல் ஜனநாயகப்படி நடக்கவில்லை. இதனை ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், பாலன் ஆகிய எம்எல்ஏக்களே எதிர்த்தனர். இந்த நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், சட்டசபை செயலரிடம் கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக முழுமையாக ஆதரிக்கிறது.புதுச்சேரியில் மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஒரு லட்சம் பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிலத்தை கையகப்படுத்தி வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்கிறது. பாஜகவுக்கு பெயர் கிடைத்து விடும் என்பதால் மத்திய அரசின் திட்டங்களை மாநில காங்கிரஸ் அரசு செயல்படுத்துவது இல்லை. எல்லா விஷயங்களிலும் புதுச்சேரி அரசு, கமிஷன் பார்க்கிறது. ரேஷன் அரிசியில் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை கமிஷன் பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அவரிடம், ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என கேட்டதற்கு, இதை எதிர்க்கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். நியமன எம்எல்ஏவுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா? என கேட்டபோது, ஓட்டுரிமை இருக்கிறது என சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது என்றார். பேட்டியின்போது துணை தலைவர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.