×

கட்டிடத்தின் மாடியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலி

சிதம்பரம், ஆக. 22: சிதம்பரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மாடியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து பலியானார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் தாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மகாலிங்கம் (32). இவர் சிதம்பரம்- சீர்காழி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணிகளில் கட்டிட உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18ம் தேதி இரவு இவர் வழக்கம்போல் அந்த குடியிருப்பின் இரண்டாவது மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.இந்த மாடிப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்படாத நிலையில் எதிர்பாராதவிதமாக மகாலிங்கம் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக அங்குள்ளவர்கள் மீட்டு அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி ரேவதி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது