×

திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில் கலெக்டர் எச்சரிக்கை

திருவண்ணாமலை, ஆக.22: திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்திருப்பதாவது:ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் சேகரிப்பு, பயன்பாடு, உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகியவற்றை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை செய்திருக்கிறது.எனவே, தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பயன்படுத்தும் பொதுமக்கள் மீது உள்ளாட்சி விதிகளின் கீழ் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், சமீப காலமாக திருமண மண்டபங்களில் பெட் பாட்டில் எனப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில், 300 மிலி முதல் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் வழங்கப்படுகிறது.இதனால் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, அழிப்பது சவாலான பணியாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டை தவிர்க்க, திருமண மண்டபங்களில் நீர் சுத்திகரிப்பு கருவி பொருத்த வேண்டும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எவர்சில்வர் மற்றும் இதர உலோகக் குவளைகள் மூலம் பாரிமாற வேண்டும்.மேலும், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவை செயல்படுத்தாத திருமண மண்டபங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே