ஜோலார்பேட்டை, ஆக. 22: ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் உருண்டு விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக மலைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த 19ம் தேதி மலைப் பாதையின் 2வது வளைவில் ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு சாலையின் நடுவே விழுந்தது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாறாங்கல்லை அகற்றினர்.இதேபோல் நேற்று முன்தினம் மலைப்பாதையில் 9 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. அப்போது, அவ்வழியாக பொதுமக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.