அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிற மொழி ஆசிரியர்கள் பட்டியல் சேகரிப்பு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு

வேலூர், ஆக.22:அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் 2ம் நிலை தேர்வில் தேர்ச்சி பெறாத பிற மொழி ஆசிரியர்களின் பட்டியலை அனுப்பும்படி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தமிழ்மொழி பயிலாதவர்களும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி அரசு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். தமிழ்மொழி தேர்வை எழுதாமல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பேசுவது, எழுதுவது தொடர்பாக தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளி படிப்பில் தமிழ் மொழியினை மொழிப்பாடமாக பயிலாதவராகவோ அல்லது பிற மொழிகளில் பட்டப்படிப்பில் கல்வி பயின்றவராகவோ இருந்தால் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ்மொழி 2ம் நிலை தேர்வில் பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ் மொழியில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசு பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டம் 2016-ன் பிரிவு 21(2)-க்கு முரணாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் விவரங்களை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி விவரங்களுடன் தனித்தனி அறிக்கையாக அனுப்ப வேண்டும்.

Related Stories: