×

பேச்சிப்பாறை சீரோபாயின்டில் 2 ஆலயம், 44 ஆக்ரமிப்பு வீடுகள் இடிப்பு அதிரடிப்படை குவிப்பால் பரபரப்பு

அருமனை, ஆக.22: பேச்சிப்பாறை  சீரோபாயின்டில் நேற்று 2 ஆலயம் மற்றும் 44 ஆக்ரமிப்பு வீடுகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் அந்த  பகுதியில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.பேச்சிப்பாறை சீரோபாயின்ட் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக  சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடும்பத்துடன் வசித்து  வருகிறார்கள். தற்போது பேச்சிப்பாறை அணையில் சாய்வணை கட்டும்  பணிகள், பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அணையின்  பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில் அணையின் கீழ்பகுதியில் அரசு  நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை  சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாற்று ஏற்பாடு  செய்யும் வரை இந்த வீடுகளை இடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த  திங்கள்கிழமை அனைத்து கட்சிகள் சார்பில் பேச்சிப்பாறை சீரோ பாயின்ட்  பகுதியில்  சாலைமறியல் போராட்டம் நடந்தது.இந்த நிலையில் நேற்று காலை தக்கலை சப்-கலெக்டர் சரண்யா அறி மேற்பார்வையில் தாசில்தார்கள்,  மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீரோபாயின்ட் பகுதிக்கு வந்தனர். பின்னர்  ஆக்ரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக  மின் வாரிய  ஊழியர்கள் வீடுகளில் உள்ள மின்  இணைப்புகளை துண்டித்து மின் மீட்டரை அகற்றினர்.

 பெரும்பாலான வீட்டினர் தாங்களாகவே முன் வந்து தங்களது வீடுகளில் இருந்த  உடமைகளை வெளியே எடுத்து வந்தனர். 2 ஆலயம் மற்றும் 44 வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில்  சம்பவ இடத்தில் அதிரடிப்படை உள்பட 300 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக பேச்சிப்பாறை- கோதையாறு சாலையில் செல்லும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.  அரசு பஸ்கள் காலையில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் வழக்கம் போல் இயங்கின. வீடுகளை இழந்த மக்கள் சோகத்துடன் நின்றனர். பலர் வீடு மற்றும் உடமைகளை இழந்து அழுது புலம்பினர். இவர்களுக்கு பேச்சிப்பாறை சமத்துவபுரம் அருகே மாற்று இடம்  ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி