ஈத்தாமொழி, ஆக. 22: ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோயிலில் புகுந்து பணம், குத்துவிளக்குகளை திருடி சென்ற மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ராஜாக்கமங்கலம் அருகே தெற்கு கன்னக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவரது வீட்டுக்கு சற்று தொலைவில் முப்பிடாதி அம்மன் கோயில் உள்ளது. குடும்ப கோயிலான இங்கு, ராஜேந்திரன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். மீண்டும் நேற்று முன்தினம் பூஜை செய்ய கோயிலுக்கு சென்றார். அப்போது ேகாயிலின் முன் பகுதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது பணம் திருடப்பட்டிருந்தது . மேலும் கோயில் அருகே உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த 20 குத்துவிளக்குகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.