குளச்சல், ஆக.22: குமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு 10 நாட்கள் நடக்கும் மாசிக்கொடையை அடுத்து ஆவணி மாதம் நடக்கும் அஸ்வதி பொங்கல் வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் அஸ்வதி பொங்கல் வழிபாடு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிமை) மகா சுமங்கலி பூஜையுடன் தொடங்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். 2 ம் நாளான நேற்று அஸ்வதி பொங்கல் வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு தேவி பாராயணம் மற்றும் பஜனை, 9 மணிக்கு நாதஸ்வர இன்னிசை, நண்பகல் 11.30 மணிக்கு அசுவதி பொங்கல் வழிபாடு நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். முதல் பொங்காலை மற்றும் சிறப்பு அன்னதானத்தை தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார். தேவசம் இணை ஆணையர் அன்புமணி, மேலாளர் ஜீவானந்தம், தந்திரி மகாதேவரு ஐயர், மேல்சாந்தி சட்டநாதன் குருக்கள், காரியம் ஆறுமுகதரன், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண்தங்கம், கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவசெல்வராஜன், பொருளாளர் திலக் மற்றும் இந்து சேவா சங்கம், தேவி சேவா சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 3 ம் நாள் மாலை திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.