ஒரத்தநாடு வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற விதைகள் விநியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு

ஒரத்தநாடு, ஆக. 22: ஒரத்தநாடு வேளாண் உதவி இயக்குனர் பிரபாகர் கூறியிருப்பதாவது: ஒரத்தநாடு வேளாண் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நாற்று தயாரித்தல், நாற்று பறித்தல், நாற்று கட்டு தூக்கி வருதல், நடவு ஆகிய சாகுபடி பணிகளுக்கு தேவையான சாகுபடி செலவையும், வேலையாட்கள் தேவையையும் கணிசமாக குறைத்து, நடவு பயிருக்கு சமமாக மகசூல் பெற்றிட நேரடி நெல் விதைப்பு முறையை உகந்ததாகும்.நடவுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காத நெருக்கடி காலத்தில் நட முடியாமல் நாற்றின் வயது அதிகமாகி நடுவதால் நெல் மகசூல் பாதிப்படைகிறது. நேரடி நெல் விதைப்பில் அந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. நன்கு உழுது சமபடுத்திய நடவு வயலில் விதைப்பதற்கு முன்பு வேளாண்துறை பரிந்துரை செய்யும் உரத்தை இட்டு ஒரு ஏக்கருக்கு தேவையான 40 கிலோ விதையுடன் உயிர்உர நேர்த்தி செய்து விதைக்கும் கருவி மூலமோ, கைத்தெளிப்பாகவோ தெளிக்கலாம். சி.ஆர் 1009 ரகம் செப்டம்பர் முதல் வாரம் வரை நீண்டகால ரகமாக விதைப்பதற்கு ஏற்றதாகும்.ஒரத்தநாடு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள் நெல் நுண்ணூட்டங்களும், விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நடவு பயிரை விட 10 நாட்கள் குறைவான வயதில் முதிர்ந்து பலன் தரக்கூடிய நேரடி நெல் விதைப்பு செய்து பயன்பெறலாம்.

Related Stories: