×

வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

தஞ்சை, ஆக. 22: தஞ்சையில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்க.பிரபாகரன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் யுவராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் சுதந்திர தினவிழாவில் கலெக்டரால் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நற்சான்றிதழ் வழங்க தேர்வு செய்வதில் பாகுபாடு பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாவட்ட வருவாய் அலுவலரும், அலுவலக மேலாளர் (பொது) ஆகியோர் ஒரு சங்க தலைவர் போல் செயல்படுகின்றனர். எனவே இருவரையும் மாறுதல் செய்ய கலெக்டர் மற்றும் தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அனைத்து அலுவலர்களுக்கும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை பணி பார்ப்பதற்கு வட்ட அலுவலகங்களில் துணை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை புதிதாக தோற்றுவிக்க வேண்டும்.

நிர்வாக நலன்கருதி துணை தாசில்தார் மற்றும் தாசில்தார்களுக்கு மடிகணினி வழங்க வேண்டும். கூடுதல் பணி பொறுப்பு வழங்கும்போது அதற்குரிய தொகை வழங்க வேண்டும்.தஞ்சை மாவட்டத்தில் நீதித்துறை பயிற்சிக்கு முதுநிலை வரிசைப்படி துணை தாசில்தார்களை உடனடியாக அனுப்ப வேண்டும். மாவட்டத்தில் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள் தொடர்ந்து அப்பணியிடங்களிலேயே பணிபுரிகின்றனர். அவர்களை வேறு பணியிடங்களுக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை தாசில்தார் மணிகண்டன் நன்றி கூறினார்.




Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...