கும்பகோணம், ஆக. 22: கும்பகோணம் நகர பகுதியில் கட்டிட தொழிலுக்கு செல்பவர்கள், சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து தினம்தோறும் அதிகளவில் வருகின்றனர். தொழிலாளர்களை பேருந்தில் அழைத்து சென்றால் அதிக செலவாகும் என்பதால் கட்டிட பொருட்களுடன், வேலையாட்களையும் மேஸ்திரிகள் ஏற்றி சென்று வருகின்றனர். கும்பகோணத்தில் தினம்தோறும் அதிகமான லோடு ஆட்டோக்கள் தொழிலாளர்களை ஏற்றி செல்கின்றனர். லோடு ஆட்டோவில் பொதுமக்களை ஏற்றி செல்லக்கூடாது என்று அரசு உத்தரவு இருந்தும் அலட்சியப்படுத்தும் விதமாக ஏற்றி செல்கின்றனர்.கடந்த 18ம் தேதி திருச்சி மாவட்டம் முசிறியில் கிணற்றுக்கு லோடு ஆட்டோ பாய்ந்து 8 பேர் பலியாகினர். ஆனால் இந்த விபத்தை பற்றி கவலைப்படாமல் கும்பகோணத்தில் லோடு ஆட்டோ வைத்திருப்பவர்கள், பொதுமக்களையும் தொழிலாளர்களையும் ஆபத்தான நிலையில் அழைத்து செல்கின்றனர்.