×

சித்தாமூர் - செய்யூர் இடையே குண்டும் குழியுமான நெடுஞ்சாலை

செய்யூர், ஆக. 22: சித்தாமூரில் இருந்து செய்யூர் செல்லும் நெடுஞ்சாலை பழுதாகி, சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சித்தாமூரில் இருந்து செய்யூர் செல்லும் நெடுஞ்சாலை 18 கிமீ தூரம் கொண்டது. செய்யூர் வட்டார பகுதிகளில் இருந்தும் மதுராந்தகம், சோத்துப்பாக்கம், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த நெடுஞ்சாலை, முறையாக பராமரிக்காததால்  நாளடைவில் பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துகள் சந்தித்தனர்.

இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், மேற்கண்ட சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியில் பேட்ஜ் பணிகள் மூலம் சரி செய்து வருகின்றனர். ஆனால், அதனை தரமாக செய்யாததால், மீண்டும் அதே பகுதியில் பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர்.குறிப்பாக இந்த நெடுஞ்சாலையில் போதிய மின் வெளிச்சம் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, படுகாயமடைகின்றனர்.எனவே, பெரும் விபத்துகள் நேரிடுவதற்கு முன் இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.



Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...