சென்னை: சென்னையில் 4 ஆண்டுகளில் 7 கொடூர கொலை சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகள் புழல் சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யுவராஜ்(26), ஈஸ்வரன்(25). இவர்கள் இருவர் மீதும் கடந்த 2016 முதல் இதுவரை 7 கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யுவராஜ் மீது 3 ெகாலை வழக்கும், ஈஸ்வரன் மீது 4 கொலை வழக்கும் இருக்கிறது. சென்னை வியாசர்பாடி கோஷ்டிக்கு இவர்கள் இருவரும் தலைவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். சவுகார்பேட்டை கோஷ்டிக்கு பாலாஜி தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார். இரு கோஷ்டிக்கும் யார் பெரிய ரவுடி என்ற மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் பாலாஜி கோஷ்டியை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொடூர ரவுடிகளான இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே நேரத்தில் இவர்களின் எதிர்கோஷ்டியை சேர்ந்தவர்களும் புழல் சிறையில் உள்ளனர். ஒரே சிறையில் இரு கோஷ்டியும் இருந்தால் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் யுவராஜும், ஈஸ்வரனும் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு இவர்கள் சேலம் கொண்டு வரப்பட்டு உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டனர்.