புழல்: புழலில் கட்டி முடித்து, 2 ஆண்டுகள் ஆகியும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை பூட்டி கிடப்பதால் உடனே திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுத்தி உள்ளனர்.சென்னை மாநகராட்சி புழல், 23வது வார்டு அலுவலகம் அருகில் கடந்த 7 ஆண்டுகள் முன்பு மாநகராட்சி சார்பில் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டிடப்பணிகள் தொடங்கியது. தற்போது இந்த கட்டிட பணி முடிந்து 2 ஆண்டு ஆகியும் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்த மருத்துவமனை திறந்துவைக்கபட்டால் பொது மருத்துவம், குடும்ப நலம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், டெங்கு காய்ச்சல், மலேரியா, காசநோய், கருப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும், இசிஜி, ஸ்கேன் மற்றும் பரிசோதனை இலவசமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.