×

வழிப்பறியால் தினமும் பணத்தை இழக்கிறோம் 10 கிராம மக்கள் புகார்

ராமநாதபுரம், ஆக.20:  ராமநாதபுரம் அருகே தெற்குதரவை கிராமத்திற்கு செல்லும் வழியில் கடந்த சில நாட்களாக இரவில் வீட்டுக்கு செல்லும் வியாபாரிகளை மர்ம நபர்கள் கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி பணத்தை வழிபறி செய்து வருகின்றனர். இதை தடுக்க கோரி ப்பகுதியை சேர்ந்த 10 கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் 11 கலுங்கிலிருந்து 3 கி.மீ. தொலைவில் தெற்குதரவை கிராமம் உள்ளது. கிராமத்திலிருந்து அனைத்து தேவைகளுக்கும் மற்றும் வியாபாரத்திற்கும் தினமும் ராமநாதபுரம் சென்று வருகிறோம். நகர் பகுதியில் தொழில் செய்யும் வியாபாரிகள் தங்களது தொழிலை முடித்து கொண்டு இரவில் பணத்தோடு வரவேண்டியுள்ளது. இதனை நன்கு அறிந்து கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் தங்களது டூவீலர்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி கொண்டு தனியாக வருபவர்களை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மேலும் தங்களிடம் தெற்குதரவை முஸ்லிம் ஜமாத் சார்பாக கடந்த மாதம் 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் கொலை வெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த 11ம் தேதி தெற்குத்தரவை கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சுக்கூரை வழிமறித்து வழிப்பறி செய்து அரிவாளால் தாக்கியுள்ளனர். இது சம்பந்தமாக கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இதன் பிறகும் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். சம்பவங்கள் அனைத்தும் இரவு 8 மணியிலிருந்து 11 மணி வரை கலுங்கிற்கும் தெற்குதரவை பஸ் நிறுத்தும் இடையே நடைபெறுகிறது. எங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவசர தேவைக்கு கூட தனிமையில் செல்ல இயலாத நிலையில் உள்ளோம். எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இசிஆர் ரோட்டிலிருந்து கிராமம் வரை ரோந்து பணிகளை அதிகமாக்கி அந்த வழியில் செல்லும் அனைத்து ஊர் மக்களுக்கும் பயமற்ற பயணத்தை உறுதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஈசிஆர் ரோடு விலக்கில் ஹைமாஸ் விளக்கு அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை