×

இடிந்து விழும் அபாயத்தில் கடலாடி பேருந்து நிலையம்

சாயல்குடி, ஆக.20:  கடலாடி பேருந்து நிலைய கட்டிடம் சேதமடைந்து, உடைந்து விழுவதால், பயணிகள் உள்ளே செல்ல அச்சப்பட்டு வெயில் மற்றும் மழையில் காத்திருப்பதாக தெரிவித்தனர். கடலாடி, தாலுகா தலைமையிடமாக உள்ளது. இதனால் பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கான கிராமங்களிலிருந்து பொதுமக்களும், கடலாடி அரசு கல்லூரி மற்றும் அரசு மேல்நிலை பள்ளியில் படிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட கிராமபுற மாணவர்களும் வந்து செல்கின்றனர். பேருந்தில் வந்து செல்வதற்கு, கடலாடி பேருந்து நிலையம் வரும் பொதுமக்கள், பேருந்து நிலையம் சேதமடைந்து கிடப்பதால் அவதிப்பட்டு வருகின்றனர். சாயல்குடி-முதுகுளத்தூர் சாலை அருகில் கடலாடி பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலைய கட்டிடம் கடந்த 1969ல் கட்டபட்டதால் கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து கிடக்கிறது. அதிலிருந்து பெயர்ந்து விழும் சிமென்ட் பூச்சுகள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் தலையை பதம்பார்த்து வருகிறது. தற்போது பெய்த மழைக்கு ஒழுகி, தேங்கி, சேரும், சகதியுமாக கிடப்பதால் பொதுமக்கள் பேருந்து நிலைய பிளாட்பாரங்களில்  காத்திருக்கும் அவலநிலை உள்ளது. பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளும் உடைந்து கிடப்பதால், பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு நுழைவதில்லை. பேருந்து நிலையத்திற்கு முன்பாக பழைய ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்குள்ள கட்டிடங்களும் சேதமடைந்து கிடக்கிறது. இதனையும், பேருந்து நிலைய பழைய கட்டிடங்களை அகற்றி விட்டு,  புதிய பேருந்து நிலைய கட்டிடத்தை கட்ட அரசு முன்வரவேண்டும் என கடலாடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை