திருச்சி, ஆக.20: திருச்சி மாவட்டம் லால்குடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் எஸ்தர். இவர் தனது மகள் ஆர்த்தி (17) என்பவரை ஏர்போர்ட் அன்னை ஆசிரமத்தில் சேர்த்திருந்தார். நேற்றுமுன்தினம் வெளியில் சென்று வருவதாக கூறிச்சென்ற ஆர்த்தி மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து ஆசிரம கண்காணிப்பாளர் உமா ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார்.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை குன்னத்தூரை சேர்ந்தவர் புஷ்பா (20). இவர் திருச்சி மேலப்புதூரில் உள்ள பிஷப் ஹவுசில் வேலை செய்து வந்தார். கடந்த 3ம்தேதி சம்பளம் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்று வருவதாக சென்றவர் திரும்பிவரவில்லை. இதுகுறித்து இவரது பாட்டி சரோஜா, பாலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். திருச்சி உறையூர் டாக்கர்ஸ்ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் பிருந்தா(23). இவர் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் கலைமதி உறையூர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் மாயமான இளம்பெண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். 3 பெண்களையும் யாரும் கடத்தினார்களா, அல்லது அவர்களாகவே எங்காவது சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.