கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் நகை பணம் வழிப்பறி

திருச்சி, ஆக.20: திருச்சி வாலிபரிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி ராம்ஜிநகர் கள்ளிக்குடி ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (24), ஒரு மோட்டார் கம்பெனியில் கன்சல்டன்சியாக வேலை செய்து வருகிறார். இவர் பழைய, புதிய வாகனங்களை வாங்கவும், விற்கவும் ஆலோசனைகள் வழங்குவார். இதில் அரியமங்கலத்தை சேர்ந்த ராஜா என்பவரை தொழில் ரீதியாக சந்தித்து பேசுவதற்கு நேற்றுமுன்தினம் அரியமங்கலம் சென்றார். அங்கு விக்னேஸ்வரன் தனது புல்லட் பைக்கில் எஸ்ஐடி கணபதி நகருக்கு வந்து காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி, விக்னேஸ்வரனை மிரட்டி அவர் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயின், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து விக்னேஸ்வரன் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: