கூனஞ்சேரி அருகே பேனரை கிழித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

பாபநாசம், ஆக. 20: கூனஞ்சேரி அருகே தகராறில் ஈடுபட்டு பேனரை கிழித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியில் முயற்சியில் ஈடுபட்டனர்.பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் கூனஞ்சேரியை சேர்ந்த மணிவண்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுவாமிமலை அருகே திருப்புறம்பியத்தை சேர்ந்த 4 பேர், 2 பைக்குகளில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மணிவண்ணன், சத்தியமூர்த்தியிடம் பிரச்னை செய்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர் பைக்கில் சென்ற 4 பேரும் சிறிது நேரம் கழித்து திருப்புறம்பியத்திலிருந்து 10 பைக்குகளில் 20 பேருடன் வந்தனர். இதையடுத்து அவர்கள் தயாளன் வீட்டு வாசலில் போட்டிருந்த பந்தலை தள்ளி விட்டதுடன் திமுக பிளக்ஸையும் கிழித்தனர்.இதை கண்டித்து திமுக பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கூனஞ்சேரி மெயின் சாலையில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். கபிஸ்தலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் உட்கார்ந்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: