பெரம்பலூர், ஆக. 20: பெரம்பலூரில் நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தனா உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மலரஞ்சலி செலுத்தினார்.
பெரம்பலூர் தீரன்நகரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு பஸ் கண்டக்டர் செல்வராஜ் என்பவரின் மகள் கீர்த்தனா 2 முறை நீட் தேர்வெழுதி அதிக மதிப்பெண் எடுக்க முடியாததல் மருத்துவக்கல்லூரியில் சேர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து சமீபத்தில் கீர்த்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையறிந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ராசா நேற்று தீரன்நகரில் உள்ள கீர்த்தனாவின் இல்லத்துக்கு சென்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் வல்லபன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.