திருப்பூர்,ஆக.20: திருப்பூர் வளம் பாலம் அருகே ஓட்டல் கழிவுகள் சாப்பிட வரும் கால்நடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகரின் வளம் பாலம் அருகே பழைய பஸ் நிலையம், தீயணைப்பு அலுவலகம், திரையரங்கு என பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்கள் ஏராளம் இருக்கிறது. மேலும், இந்த ரோட்டில் தினமும் எராளமான வாகனங்கள் செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். மேலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் ஓட்டல் கழிவுகள், பழக்கழிவுகளை ஆகியவற்றை சாப்பிட வரும் மாடுகள் ஆங்காங்கே நடந்து செல்கிறது.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒருவரை மாநகராட்சி அருகில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடு ஒன்று முட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும், வாகனங்கள் ஒலி எழுப்பவதினால் மாடுகள் மிரண்டு ஓடியும் வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. இன்னும், சில நேரங்களில் ரோட்டில் படுத்து இளைப்பாறுகின்றன. இதனால், விலகி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மாடுகளை வளர்க்கும் உரிமையாளர் மாடுகளை கட்டி வைத்து பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி நிர்வாகம் மாடுகளை பறிமுதல் செய்து மாடு வளர்க்கும் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர்.