கூடலூர், ஆக. 20:காந்தி நகர் பகுதியில் நடமாடும் காட்டு யானைகளால் கிராம மக்கள் மீண்டும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குட்டிகளுடன் 7 யானைகள் கூட்டமாக இரவு நேரத்தில் நடமாடி வருகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் அங்குள்ள கொய்யா மரங்களின் கிளைகளை ஒடித்து சேதப்படுத்தியுள்ளன. அப்பகுதிக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்த யானை கூட்டம் கனகராஜ் என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
இதில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து யானைகளை விரட்டி வீட்டில் இருந்தவர்களை காப்பாற்றினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் நேற்று முன்தினம் இரவும் மீண்டும் அதே யானை கூட்டம் குடியிருப்புகளை ஒட்டி நடமாடியுள்ளன. குட்டிகளுடன் வரும் இந்த யானை கூட்டம் கிராமப்பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.