மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய அமைச்சக செயலாளர் ஆய்வு

கோவை, ஆக.20:  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மத்திய அமைச்சகத்தின் துணை செயலாளர் கோவையில் நேற்று ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் கூட்டரங்கில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து அலுவலர்களுடன் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மத்திய அமைச்சக துணைச் செயலாளர் சர்பேஸ்வர் மஜி மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு கட்டமைப்பினை துணைச் செயலாளர் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் ஆகியோர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, உக்கடம் பெரியகுளத்தில் கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும், வெள்ளலூர் குளத்தின் நீர் இருப்பு குறித்தும், மியாவாக்கி முறையில் காடுகள் வளர்ப்பு குறித்தும் ஆய்வு நடத்தினர்.கோவை மாநகராட்சி 99வது வார்டு சித்தண்ணாபுரம் துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, தனியார் உணவகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: